யாழ் பல்கலைகழகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் விஜயம் !

யாழ் பல்கலைகழகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி, இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர், பேராசிரியர் எஸ். ரவிராஜிடம் பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கவுள்ளார்.
அத்துடன் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதிஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஶ்ரீபவானந்தராஜா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான வசதிகள் இல்லாத நிலையில், இங்கிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை அனுராதபுரம் மற்றும் தென்னிலங்கையில் அமைந்திருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி முடிவுகளைப் பெற வேண்டி இருந்தது.
இதன் காரணமாக பி.சி.ஆர் முடிவுகளைப் பெறுவதில் பெரும் அசௌகரியங்கள் காணப்பட்டதுடன், தாமதமும் ஏற்பட்டது.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் தன்னிடமிருந்த ஒரேயொரு பி. சி. ஆர் இயந்திரத்தைக் கொண்டு, கடந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.
இதனையடுத்து வடக்கில் பெறப்பட்ட மாதிரிகளை இங்கேயே பரிசோதித்து, முடிவுகளை விரைவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதன் பின்னரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள இரண்டு பி. சி. ஆர் இயந்திரங்களைக் கொண்டு நாளொன்றுக்கு சராசரியாக 300 மாதிரிகளைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.