சிறையில் ரஞ்சனுக்கு ஏற்பட்ட நிலை!

நான்கு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, இதுவரை கைதிகளுக்கான இலக்கம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
பல்லன்சேன சிறைச்சாலையிலிருந்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்க, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், தனி சிறைகூடமொன்றில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தெரிவிக்கின்றார்.
எனினும், ஏனைய சிறை கூடங்களில் மூன்று கைதிகள் விகிதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன் அந்த சிறைச்சாலையில் சிறை கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் என 1100 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு வெளியிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், மாதத்திற்கு ஒரு முறை மாத்திரமே உறவினர்கள் அவரை சந்திக்க முடியும் எனவும் அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், கடந்த சில தினங்களாக ஏனைய சிறை கைதிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய சிறை கைதிகள் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு சிறந்த வரவேற்பை வழங்கி வருவதுடன் , தனி சிறை கூடத்திலுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு தலையணை, பாய் மற்றும் போர்வை ஆகியன கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உடற்பயிற்சிகளை செய்வதற்கும், நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கும் ரஞ்ஜன் ராமநாயக்க நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.