இலங்கை இராணுவத்தினருக்கு 31,000 தடுப்பூசிகள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன் வரிசையிலிருந்து போராடும் இராணுவ வீரர்களுக்கு 31,000 அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனைத்து இராணுவ வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பலாலி இராணுவ வைத்தியசாலை, அநுராதபுர இராணுவ வைத்தியசாலை, மன்னார் இராணுவ தள வைத்தியசாலை, வவுனியா இராணுவ தள வைத்தியசாலை, மின்னேரியா இராணுவ தள வைத்தியசாலை, அம்பாறையிலுள்ள இராணுவ கம்பெட் பயிற்றுவிப்புக் கல்லூரி, கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலை, முல்லைத்தீவு இராணுவ தள வைத்தியசாலை,கொழும்பு இராணுவ வைத்தியசாலை, பனாகொடை 1 வது இலங்கை இராணுவ வைத்திய படையணி, தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை, 11 ஆவது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 22 வது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம், 61 வது படைப்பிரிவின் சிகிச்சை நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று பலாலி இராணுவ தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவிருந்த படையினர் மத்தியில் கலந்துரையாடினார்.
அதன்படி மேற்குறிப்பிட்ட இராணுவ வைத்தியசாலைகள் ஒவ்வொன்றிலும் 500 தடுப்பூசிகள் என்ற அளவில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 7500 தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்ட 31,000 தடுப்பூசிகளை நேற்றில் இருந்து (30) அடுத்த 3 நாட்களுக்குள் வழங்கி நிறைவு செய்ய இராணுவ வைத்தியக் குழு எதிர்பார்த்துள்ளது.
நாராஹேன்பிட்டியில் உள்ள கொழும்பு இராணுவ மருத்துவமனை, பனாகொடையிலுள்ள இராணுவ மருத்துவமனைகளின் இராணுவ மருத்துவ குழுவினரால் நேற்று 1,000 வீரர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்விலும் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா கலந்துகொண்டிருந்தார்.