தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்; இளம்பெண் ரகசிய வாக்குமூலம்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரம் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கை சிபிஐ பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ம் திகதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த 25 ஆம் திகதி கோவை மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் பெண் நீதிபதி (பொறுப்பு) திலகேஸ்வரி முன்பு மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதுடன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் சிலரின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.