போலி செய்தியை வெளியிட்ட நபருக்கு விளக்கமறியல்
1 min read
Published by T. Saranya on 2021-01-27 21:07:29
(செ.தேன்மொழி)
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் போலி செய்தியை வெளியிட்ட சந்தேகநபரொருவர் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் போலி செய்தியொன்று இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
வானொலி அலைவரிசை ஒன்றின் உத்தியோகப்பூர்வ இலட்சினையை பயன்படுத்தி அந்த செய்தி பதிவேற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பிளியந்தல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காப்புறுதி நிறுவனமொன்றின் இணைய பிரிவில் பணிபுரிந்து வருபவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை இன்று புதன்கிழமை புதுக்கடை நீதிவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தியதுடன் அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது சரத்துக்கமையவும் , கணணி குற்றப்பிரிவு சட்டவிதிகளுக்கு கீழும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் அவரை பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.